கடிதம் எழுதும் காவியத்தலைவனுக்கு கின்னஸ்…இப்படிக்கு-கருணாநிதியின் கடிதம்

கடிதம் எழுதும் காவியத்தலைவனுக்கு கின்னஸ்…
இப்படிக்கு-கருணாநிதியின் கடிதம்

திமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே…

கருணாநிதியின் கடிதம் ஒன்று கருணாநிதியின் இந்த அழிச்சாட்டியம்(?) தாங்க இயலாமல் கருணாநிதிக்கே கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நகைச்சுவை( புரிகிறது ..சீரியசான) கற்பனை இது.

மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்களுக்கு..

உங்களை மதிப்பிற்குரிய கருணாநிதி என்று அழைத்ததற்கு காரணம் இந்த உலகில்..அறிவியல் தொழிற் நுட்பம் வளர்ந்த இக் காலக்கட்டத்தில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ..யாருக்கும் எவ்வித உபயோகமில்லாமல்.. கதை கதையாய் …பக்கம் பக்கமாய் எழுதி குவிக்கும் தாங்கள் என்னைப் பொறுத்த வரை மதிப்பிற்குரியவர்தான்.

முன்பொரு காலத்தில் எனக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. 50 ,60 வருடங்களுக்கு முன்பெல்லாம் அனைவருக்கும் நான் தான் மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப கருவி. என் வருகைக்காக ஊரே காத்திருக்கும். என்னை தபால்காரர் கொண்டு வருகையில் ஆசை ஆசையாய் வாங்கி துள்ளிக் குதித்தவர்களை நான் கண்டிருக்கிறேன். மகனின் கடிதத்தினை பார்த்த அழுத தாயை பார்த்திருக்கிறேன். காதலனின் கடிதத்தினை ரகசியமாக வாங்கி முத்தமிட்ட காதலியின் உதடுகளை பார்த்திருக்கிறேன். காதல் கோட்டை என்று என்னை வைத்து படமே வந்தது. ம்ம்ம். அதெல்லாம் ஒரு காலம் . அதற்கு பிறகு தொலைபேசி வந்தது. அப்போது என் மரியாதை சற்றே தளர்ந்தாலும் முற்றிலுமாக குறையவில்லை. இக்காலத்தில் செல்போன் என்ற ஒரு கருவி வந்திருக்கிறது. அவன் தான் என் வில்லன் . செல்போன் வந்த பிறகு செல்லாக்காசு ஆகிப் போனேன் நான். அப்படிப்பட்ட வலிமையான அந்த வில்லனையே தோற்கடித்தவர் தாங்கள். தினந்தோறும் மூட்டை மூட்டையாய் முரசொலியில் கடிதம் எழுதுகிறீர்கள். பிறகு தலைமை செயலகத்தில் அமர்ந்து வழுக்கியும்..வழுக்காமலும்.. நாசுக்காய் நாலு பைசாவிற்கு கூட மத்திய அரசு மதிக்காமல் இருக்கும் அளவிற்கு கடிதம் எழுதுகிறீர்கள் . யாராவது ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டி என்ன செய்தீர்கள் என கேட்டால் அதற்கும் தேதி வாரியாக ,மணி வாரியாக (இந்த புள்ளி விபரக் கணக்கில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை) கடிதத்தினை ஆதாரமாக காட்டி ஒரு கடிதம் என என் பயன்பாட்டினை அதிகரித்துக் கொண்டே செல்கிறீர்கள். உதாரணத்திற்கு ஈழத் தமிழன் அழிக்கப்பட்ட போது நீங்கள் மத்திய அரசுக்கு எழுதி குவித்த கடிதங்கள் டெல்லி மத்திய அரசின் அலுவலகங்களில் மலை போல குவிந்து இருப்பதாகவும்..அதில் பல கடிதங்கள் பிரித்துக் கூட பார்க்கப்படாமல் பாதுக்காக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். எனக்கு தெரிந்து இவ்வளவு கடிதங்களை எழுதிக் குவித்திருப்பது தாங்கள் தான். நீங்கள் இக் காரணத்தினை கூறி கின்னஸ் சாதனைக்கு ஒரு கடிதம் எழுதலாம். ஒரு வேளை தப்பித் தவறி இந்த காரணத்திற்காக கின்னஸ் விருது கொடுக்கப்பட்டால் …அடி தூள்…அதை வைத்து கடிதம் எழுதும் காவியத்தலைவனுக்கு கின்னஸ் என அருமை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஒரு விழா எடுப்பார். அதில் வரும் கவியரங்கில் வைரமுத்து ,வாலி , பா.விஜய் போன்ற கலைஞர் அரங்க கவிஞர்களை “கடிதம் எழுதும் கலங்கரை விளக்கமே..உன் கடிதம் தான் சங்கத் தமிழின் விளக்கமே..உன் கடிதத்தினை கண்டால் அனைவருக்கும் நடுக்கமே..உன் கடிதங்களும் எதிர் காலத்தில் ஒரு புத்தகமாக மாறி உயிரை எடுக்குமே” என பாடச் சொல்லி முதல் வரிசையில் ரஜினிக்கும் கமலுக்கும் (வலுக் கட்டாயமாக ராமநாரயணனை வைத்து தூக்கி வந்து) நடுவில் அமர்ந்து ரசிக்கலாம். நினைக்கும் போது எனக்கே தலைச் சுற்றுகிறது.

என்னை நீங்களும் சில சமயங்களில் புறக்கணித்து இருக்கிறீர்கள் .டெல்லிக்கு போய் உங்கள் குடும்பத்தினருக்கு பதவி கேட்கும் போதும், எம்.பி சீட் பேரம் பேச டெல்லிக்கு போகும் போதும்..நீங்கள் கடிதங்கள் எழுதுவதில்லை. ஈழத்தமிழன் செத்தால் கூட கடிதம் எழுதி கண்ணியம் காக்கும் நீங்கள் பதவி என்ற ஒன்றுக்காக மட்டும் தான் என்னை மதிக்காமல் விமானம் ஏறி நேரே போய்விடுகிறீர்கள். அப்போதும் தாங்கள் கடிதம் எழுதி இருந்தால் …இன்னும் நான் உங்களை கொண்டாடி இருப்பேன். அப்போது மட்டும் டெல்லிக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை மாத்திரை மருந்துக் கணக்காய் தாங்கள் அனுப்பும் கடிதங்களின் உண்மை நிலை தங்களுக்கும் உறைத்து..பதவி போன்ற “உயிர் வாழும் மிக முக்கிய பிரச்சனைக்காக” நேரில் போவதே சாலச் சிறந்தது என சரியாக புரிந்துக் கொண்டு போய் விடுகிறீர்கள்.

இதெல்லாம் கூட பரவாயில்லை. என் மதிப்பினை நான் உணர்ந்து என் காலரை நானே தூக்கி விட்டுக் கொண்ட காலமும் உண்டு. சமீபத்தில் கொலை, கொள்ளை,கடத்தல் போன்ற மாபெரும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு வந்த போது ..உங்கள் தலைமையின் கீழான தமிழக காவல் துறை டெல்லி காவல் துறைக்கு எழுதிய கடிதம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நீதிமன்றங்களுக்கு கூட குற்றவாளிகளை அழைத்து வருவது சிரமம் என யோசிக்கும் காவல்துறை நீதிபதி அறையில் வீடியோ கான்பிரன்ஸிங் முறை மூலம் வழக்கு நடத்துகையில் .. ஒரு குற்றவாளியினை பிடிப்பதற்கு ..நாடெங்கும் பேசினால் 50 பைசா என்ற நல்ல திட்டத்தினை கொண்டு வந்த கழக அரசின் காவல் துறை தொலைபேசி ,தந்தி, இணையம், செல் போன் என்ற எதையும் தூக்கி எறிந்து விட்டு எழுதினார்களே ஒர் கடிதம் …அது கடிதம் அல்ல…காலம் காலமாய் போற்றி காக்க வேண்டிய காவியம். டெல்லிக்கு வந்த கொலைக்காரன் டக்ளஸ் தேவானந்தாவினை பிடிக்க கடிதம் எழுதிய காவல் துறை ..இதோ மீனவன் செத்ததற்காக கதறும் சீமானைப் பிடிக்க மட்டும் தனிப்படைகள் வைப்பதுதான் எனக்கு புரியவில்லை.

டெல்லிக்கு அனுப்பும் கடிதங்களை எந்த தபால் பெட்டி மூலம் அனுப்புகிறீர்கள் என்று தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அந்த தபால் பெட்டியை உணர்வுள்ள எவனாவது தூக்கிக் கொண்டு கடலில் போட்டு விடப் போகிறான். அஞ்சல் துறையை அழிவில்லாமல் வாழ வைக்கும் உங்கள் அருமை இங்குள்ள எவனுக்காவது புரிகிறதா .. ( அய்யய்யோ.. இதை ஜெகத்ரட்சகன் படித்து விட்டு அஞ்சல் துறையை வாழ வைக்கும் அருமை தலைவருக்கு விழா எடுத்தால்..மேற்கண்ட விபரீத விளையாட்டிற்கு யார் பொறுப்பேற்பது..? )

என்னவோ சாட்டிலைட்டு ன்னு சொல்றான் ..இண்டர்நெட்டுன்னு சொல்றான். ஆனால் நீங்க மட்டும் தான் இன்னும் பேட்டரி லைட்டு காலத்துலயே இருந்துகிட்டு கடிதம் எழுதிகிட்டு இருக்கீங்க. நாட்டுல குப்பன்., சுப்பன்,கோவிந்தன் எல்லாம் எவனும் கடிதம் எழுதறது இல்ல. எஸ் எம் எஸ் அனுப்பிகிட்டும், வாய்ஸ்மெயில்ல பேசிகிட்டு இருக்கான். பொங்கல் வாழ்த்துக்கூட அனுப்பாம ஹேப்பி பொங்கல்ன்னு காப்பியை குடிச்சிகிட்டே கதை பேசுறான். பல ஊர்ல போஸ்ட் ஆபிஸ்ல காக்கா குருவி கூட கழியறத்துக்கு கூட வர்றதுல்ல.. மணி ஆர்டர் மணி டிரான்ஸ்பரா ஆயிட்டிச்சி.

ஆனா இந்த காலக் கட்டதிலும் நாய் கூட மதிக்காத எங்களை தாங்கள் மட்டும் மதித்து வருகிறீர்களே.. அதுதான் நெஞ்ச உருக்கி பஞ்சா அடிக்குது.. டெல்லிகார மன்மோகன் சிங் நீங்க எந்த கடிதம் அனுப்பினாலும் ..எப்ப அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்க பரீசிலிக்க ,ஆய்வு செய்து ஆலோசனை செய்ய அடுத்த மாதம் தயாராவோம் என்ற தரமான ஒரே பதிலை நாளொன்றுக்கு 100 ஜெராக்ஸ் காப்பி வீதம் போட்டு தயாரா இருக்கார்.

அப்பவும் நீங்க விட்டீங்களா.. ஒரே கடிதம் ஒராயிரம் முறை பதிலா வந்தாலும்.. மறு நாள் காலை தினந்தந்தி பேப்பர்ல புது நியூஸ் போல போட்டுவுட்டுவீங்கல்ல.. அதான் சூப்பர் .

விடுங்க தலைவா..பேசறவன் பேசட்டும். தூத்தறவன் தூத்தட்டும். அவனுக்கும் நீங்க ஒரு கடிதம் எழுதி அவனையும் கலங்கடியுங்க. அந்த கடிதத்திற்கு பிறகு நடுத்தெருவுல நின்னு நாண்டுகிட்டு சாவாமல் அவன் உயிரோடு இருப்பான்னு நினைக்கிறீங்களா..?

இப்படிக்கு.

கருணாநிதியின் கடிதம்
……………………………………………………………………………………
நன்றீ : வினவு மற்றூம் பாலா…

பற்றி கதிரவன்
பத்திரிகையாளன், சமூக ஆர்வலர், மும்பை பெதிக பொறுப்பாளர்

4 Responses to கடிதம் எழுதும் காவியத்தலைவனுக்கு கின்னஸ்…இப்படிக்கு-கருணாநிதியின் கடிதம்

  1. பெருமாள் says:

    இன்னமும் பண்டைக் காலத்தில் இருந்து கொண்டு ஓலை எழுதும் கருணாநிதிக்கு கடிதமே ஒரு செருப்படியாக நகைச்சுவையுடன் எழுதியிருக்கும் பாலாவுக்கு ஒரு பாராட்டு.

  2. Imsai Arasan 23m Karunanithi says:

    Imsai Arasan 23m Karunanithi
    Ungal 1,000,000 kadithathin ninaivaaka, unkalukku ‘Million kaditham yeluthiya apoorva thamilan’ endra pattam indru muthal valankap padukirathu.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.